பன்றிக் காய்ச்சல்

June 29, 2011


பன்றிக் காய்ச்சல்
 

1. அறிமுகம்:

2003 இன் நடுப்பகுதியில் தென்கொரியாவில் வெளிக்கிளம்பிய பறவைக்காய்ச்சலின் பீதியில் உலகம் உறைந்திருக்கும் போது, யாரும் எதிர்பாராத விதமாக பன்றிக் காய்ச்சல் தனது உக்கிரத்தை உலகிற்குக் காட்டியது. தொற்றுநோய் என்ற அடிப்படையில் 21 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலேயே உலகை அச்சுறுத்தும் ஒரு நோயாகப் பன்றிக் காய்ச்சல் என்று அழைக்கப்படும் N1 H1 இன்புளுவன்சா ஸ்வைன் வேகமாகப் பரவி வந்தது.


இதனடிப்படையில் ஐ.நா வின் உலக சுகாதார அமைப்பான WHO இன் ஜுன் 11 ஆம் திகதி ஜெனிவாவில் நடந்த அவசரக் கூட்டமொன்றில் ஸ்வைன் புளு என்று கூறப்படும் பன்றிக் காய்ச்சல் உலகளாவிய முறையில் பரவி வரும் தொற்று நோய் என உலக சுகாதார தாபனத்தின் இயக்குனரான Dr.மார்க்ரெட் தெரிவித்தார்.

02.    பன்றிக் காய்ச்சல்:

2.1   பன்றிக் காய்ச்சலும் வைரசும்:  

பன்றிக்காய்ச்சல் ஒரு வகை ‘இன்புளுவென்சா’ (INFLUENZA) நோய் ஆகும். முலையூட்டிகளிலும், பறவைகளிலும் அவற்றின் சுவாசக் குழாய்களில் தொற்றுகின்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சளிக்காய்சலையே மருத்துவ மொழியில் இன்புளுவென்சா அல்லது ஃப்ளு என்கிறார்கள். ஃப்ளு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரசுகளில் A,B,C என்று மூன்று வகை உண்டு. இவை மூன்றும் மனிதனில்  ஃப்ளு காய்ச்சலை விதைக்க கூடியவை. இவற்றில் A,C வகை வைரஸ்கள் பன்றிகளிலும், A வகை வைரஸ்கள் பறவைகளிலும் கைவரிசை காட்டக் கூடியவை.

மூன்று வகை வைரஸ்களிலும் ஏராளமான உபவகைகள் காணப்படுகின்றன. வைரசுக்கள் நியூக்கிளிக் அமிலங்களாலும், ஹீமாகுளுற்றினின்  (H-Haemagglutinin), நியூறாமினிடேஸ்      (N-neuraminidase) என்னும் புரதங்களினாலும் ஆனவை. இவ்விரண்டு வகைப் புரதங்களிலுமே முன்னையதில் 19 உபவகைப் புரதங்களும் (H1 – H19), 7 உபவகைப் புரதங்களும் (H1 – H7), இருக்கின்றன.  வைரஸ் ஒன்றில் காணக் கூடிய இரண்டு புரதங்களிலும், உபவகைப் புரதங்களினதும் சேர்மானத்தின் அடிப்படையில் ஃப்ளு வைரசுகள்  H1 H1, H1 N2, H2 H2, H2 N3, H3 N1, H3 N2, H5 N1 ……… என்றவாறு பெயரிடப்பட்டுள்ளது. இவ்வைரசுகளில் A வகையைச் சேர்ந்த H1 N1, H1 N2, H3 N2 ஆகிய மூன்றும் பன்றிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றிலும் இப்போது உலகைக் கதிகலங்க வைத்திருக்கும் பன்றிக்காய்ச்சல் வைரஸ் H1 N1 ஆகும்.

பன்றிகளில் பன்றிக் காய்ச்சல் நோய் யு வகை H1N1 வைரசால் ஏற்படுவது முதன்முதலில் 1930 ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. பன்னெடுங் காலமாகப் பன்றிகளைத் தாக்கிவரும் H1N1 வைரசுக்களிலிருந்து இப்பொழுது மனிதர்களைத் தாக்க ஆரம்பித்திருக்கும் பன்றிக் காய்ச்சல் H1N1  வேறுபட்டது. உலகம் பூராகவும் மில்லியன் கணக்கானோரைப் பீடிக்கும் சாதாரண ஃப்ளுவும் ( Common Flu) A  வகையைச்  சேர்ந்த H1N1 வைரஸ் கிருமிகளால் தான் ஏற்படுகின்றது.

இதுவரையில் மனிதர்களிலோ அல்லது பன்றிகளிலோ கூடக் காணப்படாத இந்தப் புதிய வைரசை அமெரிக்க் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் விரிவாக ஆராய்ந்துள்ளது. இதில் இப்புதுவகை வைரஸ் 2 வகை. பன்றி ஃப்ளு வைரஸ் ஒரு வகை, பறவை ஃப்ளு வைரஸ் ஒரு வகை மனித ஃப்ளு வைரஸ் என 4 விதமான ஃப்ளு வைரசுகள் இணைந்து உருவான ஒரு விரியமான கலப்பு பிறப்பு என்பது தெரிய வந்துள்ளது.

மனித உயிரிகளை பறித்த A வகை H1N1 வைரசுக்களினால் பிரசவத்தில், பன்றி ஃப்ளு வைரசுகளின் பங்களிப்பே அதிகம். இதனால் அது மனிதர்களில் ஏற்படுத்திய சளிச்சுரத்தில் பலரும் ஸ்வான் ஃபுளு (  Swine Flu) அல்லது பன்றிக் காய்ச்சல் என அழைக்கத் தலைப்பட்டனர். எனினும் இந்தப் பெயர் முழுமையான பொருத்தப்பாடு உடையது அல்ல. கோழிகளில் பறவைக் காய்ச்சல் நோயை ஏற்படுத்தும் A வகை H5N1 வைரஸ் மனிதர்களிலும் தொற்றுதலை ஏற்படுத்தியது.  கோழிகளைக் கொல்வதைப் போன்று மனிதர்களையும் கொல்கின்றது. எனவே மனிதர்கள் அந்நோயை பறவைக் காய்ச்சல் எனக் விழிப்பதில் தவறேதும் இல்லை.

ஆனால் மனிதர்களில் இப்பொழுது  ஃப்ளு வைரசுகளின் கூறுகளைக் கொண்டுள்ளதே தவிர பன்றிகளில் தொற்றியிருப்பது இதவரை அவதானிக்கப்படவில்லை. இதனால்  பன்றிக் காய்ச்சல்  என ஆய்வு மட்டத்தில் ஆட்சேபனை கிளம்பியது. பன்றிக் காய்ச்சல் என்று கூறியதால் பன்றி வளர்ப்புப் பண்ணைகளும் கடும் நெருக்கடிகளை எதிர் கொண்டன. பன்றிகளை விரோதிகளாகக் கருதி நோய் அபாயம் இல்லாத போதும் இஸ்லாமிய  நாடான எகிப்து அங்கிருந்த பன்றிகள் அனைத்தையும் கொல்ல உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. இவை போன்ற காரணங்களினால் பன்றிகளின் மீது பழியைத் துடைக்கும் முகமாக உலக சுகாதார நிறுவனம் ‘பன்றிக் காய்ச்சல் என்று  அழைப்பதைத் தவிர்த்து ‘H1N1’  இன்ஃபுளுவன்சா அல்லது 2009 H1N1 ஃப்ளு எனக் குறிப்பிடத் தொடங்கியது.


இன்ஃபுளுவன்சா வைரசுகள் அசுரர்களைப் போல தொடர்ச்சியாகத் தமது வடிவத்தை மரபணுச் சேர்க்கையை மாற்றித் கொண்டிருப்பவை. இதனாலேயே இவை புதிதாகத் தொற்றும் போது இவற்றுக்கு எதிராக முன்னர் உடல் தோற்றி வைத்திருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலோ தடுப்பு மருந்துகளின் மூலம் பெற்றுக் கொண்ட நோய் எதுவும் செய்ய இயலாது போகின்றது. பன்றிக் காய்ச்சல் என்பது ஆதோமிக் சொல்லிரிடே குடும்பத்தைச் சேர்ந்த  வைரசுகளினால்  வரும் உயிர் ஆபத்து மிக்க நோயாகும். இந் நோயைப் பரப்பு வைரசுகள் மிகவும் அரிதான மரபணித் தொகுதியைப் பெற்றிருப்பதால் இதனைக் கண்டு ஆராய்ச்சியாளர் வியப்படைந்துள்ளார்கள்.

இந்நோய் பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகின்றது. எனினும் பன்றிகளிடையே வைரசுகள் பாரிய தாக்கம் எதனையே ஏற்படுத்தவில்லை. இந்நோய் பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகின்றது. இவ் வைரஸ் ஒரு மனிதரைத் தாக்கிய பின் மனிதரின் உடலுக்குள் மரபணு சடுதி மாற்றம் பெற்று மனிதர்களிடமிருந்து வேறொரு மனிதனைத் தாக்குகின்றது.

2.1.1  H1N1 வைரசுகளின் பண்பு:

  • தும்மல் இருமலில் இருந்து வெளிப்பட்டு 2 தொடக்கம் 8 மணி நேரம் வரைத் தொற்றும் தன்மையுடன் இருக்கும்
  • நோய் வருவதற்கு ஒரு நாள் முன்பிலிருந்து பாதித்த 7 நாட்கள் வரை பரவும் தன்மையுடையது.
  • இவ் வைரஸ் உடலினூள் நுழைந்து 48 மணி நேரத்திற்குள் நன்கு செயற்படும். அதன் பின்பு பல்கிப் பெருகி உடலின் பல செல்களைத் தாக்கிவிடும்.
  • 75-100 பாகை செல்சியஸ் வெப்பத்தில் செயலிழக்கும் தன்மையுடையது.

2.2 தொற்றும் முறைகள்:

  • நோய் தாக்கியவர்களிடமிருந்து வைரஸ் மற்றவர்களிடமிருந்து வேகமாகப் பரவும்
  • காற்றின் மூலம் வேகமாகப் பரவும் ஆற்றலுடையது.
  • நோய் தொற்றியவரின் உமிழ் நீர், சளியைத் தொட்டுவிட்டு கை கழுவாமல் மற்றவரைத் தொட்டால் அதனால் பரவும்.
  • எச்சில், மூக்குச் சளி, மலம், குருதி என்பவற்றினுடாகவும் தொற்றும்.
  • இன்ஃபுளுவன்சா வைரஸ் தொற்றியுள்ள மனிதனுடைய மேல் சுவாசப் பாதையிலுள்ள திரவப் பொருளினுடாக சுகதேகியான நபருக்கு இந்நோய் தொற்றிக் கொள்ளும்.
  • நோயாளிக்கு நோய் அறிகுறிகள் ஏற்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்பும், நோய் அறிகுறி ஏற்பட்டு  7 நாட்களுக்குள்ளும் நோய் அற்ற சுகதேகிக்கு வைரஸ் தொற்றும் சந்தர்ப்பங்கள் உண்டு.
  • நோயாளி ஒருவருக்கு தும்மல், இருமல் ஏற்படும் பொழுது அல்லது பேசும் பொழுதும் வைரஸ் தொற்ற வாய்ப்புள்ளது.
  • நோயாளர் பிடித்த கதவு, தாழ்பாள், மேசை, சாவிக் கோர்வை, தொலைபேசி, பணம் முதலியவற்றில் இவ்வைரஸ் பரவும்.
  • சுகதேகியான ஒருவருக்கு நேரடியாக அல்லது நோயாளர் தொட்ட பொருட்களின் மூலமாக இந்நோய் பரவ வாய்ப்புண்டு.

2.2.1 அதிகம் நோய் தொற்றுபவர்கள்:

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்கள், கர்ப்பிணிகள், ஆஸ்மா, நீரிழிவு, இதய நுரையிரல் நோய் உள்ளவர்கள், எயிட்ஸ் நோயாளிகள், உடல் பருமனானோர், வயோதிபர், போசாக்கு குறைபாடு உள்ளோர், நீண்ட காலமாக அஸ்பிரின் மருந்த பாவிக்கும் 18 வயதிற்கு கீழ்ப்பட்டோர், நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் போன்றோரை இந்நோய் இலகுவில் தொற்றிக் கொள்கின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 70 வீதமானோர் இவ்வகையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

2.3 நோயின் அறிகுறி:

வைரஸ் பரவியதும் சளி பிடிக்கும், உடன் காய்ச்சல் ஏற்படும்,  தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை, போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போன்று காணப்படும். பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுத்தும். தொடந்து தலைவலி, குளிர்தல், நடுங்குதல், விறைப்பு தசைநார் வலி, இருமல், சளி, மூக்கில் நீர் வழிதல், தொண்டை அழற்சி, பசியின்மை, உணவின் மீது வெறுப்பு, மயக்கம், வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் இடைவிடாத காய்ச்சல் ( 100 பாகை பரனைக்கு மேல்) தொடர்ச்சியாக இருக்கும்.

  • குழந்தைகளுக்கு இந்நோய் தொற்றினால் தொடர்ந்து காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல், மூச்சு விட சிரமப்படுதல், உடல் தோல் ஒருவித நீலநிறமாக மாறுதல்  இதை நகக் கணுவை அவதானிப்பதன் மூலம் கண்டு பிடிக்கலாம்). தண்ணீர் அதிகமாக குடிக்காது இருத்தல், அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல் அல்லது வழமை போல் இல்லாது சோர்ந்திருத்தல். அமைதியின்றி இருத்தல். தோலில் சொறி (Rash)  போன்றவற்றை அவதானிக்கலாம்.
  • நோய் தீவிரமடையும் போது சுவாச உறுப்புக்களுக்குள் சளி கோர்த்துக் கொள்வதால் மூச்சுத் திணறல் உண்டாகும். உச்ச நிலையில் சிறுநீரகம், இதயம், மூளை முதலிய முக்கிய அவயவங்கள் செயலிழப்பதால் மரணம் உண்டாகும்.

2.3.1 நோய் அரும்பு காலம்:

நோய் தொற்றியுள்ள நோயாளியின் சுவாசத்தின் போது வெளியாகும் நீர்த் தன்மை எம்முறையிலாவது நோய் அற்ற சுகதேகி ஒருவரின் சுவாச உறுப்புகளினுள் சென்றால் நோய் அறிகுறிகள் ஏற்படலாம். இக்கால எல்லையில் அந்த நோயாளிக்கு எந்தவிதமான அறிகுறியும் தென்படாவிட்டாலும் அவருடைய உடலினூள் வைரஸ் மிக வேகமாக வளர்ச்சியடையும். எவ்வாறாயினும் நோய் அறிகுறி தோன்றுவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் வெளியாகும் சுவாசப் பகுதியின் நீர்த் தன்மையான பொருளில் வைரஸ் கிருமிகள் இருப்பதுடன் அதனால் மற்றவர்களுக்கு நோய் தொற்றும் வாய்ப்பும் அதிகமாகக் காணப்படும்.

2.4 நோயை உறுதிப்படுத்தல்:

இந்நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் சாதாரண காய்ச்சல், தடிமனுடனான வைரஸ் காய்ச்சலை ஒத்தவையே. அதனால் நோய் அறிகுறிகளால் மாத்திரம் நோய் ஏற்படுத்தியுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்வது கடினம். நோய் ஏற்பட்டுள்ளது என்பதை இரசாயனப் பரிசோதனை மூலமாகவே உறுதிப்படுத்த முடியும். தொற்று நோய் ஏற்பட்டு இரு நாட்களுக்குள் ‘Real time PCR’ என்னும் பரிசோதனை மூலம் இந்நோய் ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும்.


2.5 சிகிச்சை:

Oselta mivir  ( Tamiflu), Zana mvir ( Relenza) முதலான பிற பொருள் எதிர்ப்புத் தன்மையான வைரஸ் மருந்துகளைப் பாவிப்பதனால் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். என்றாலும் திருப்திகரமான பெறுபேற்றைப் பெற்றுக் கொள்வதற்கு நோய் அறிகுறிகள் ஏற்பட்டு 48 மணித்தியாலத்திற்குள் சிகிச்சை அளிக்கப்படல் வேண்டும்.

  • நோயாளருக்கு அதிகமாக நீர் அருந்தக் கொடுக்க வேண்டும். காய்ச்சல் இருப்பின் பரசிற்றமோல் போன்று மருந்து வகைகளைக் கொடுக்கலாம்.  அத்துடன் ஒய்வு கொடுத்தல் மிகவும் சிறப்பானதாகும். வைத்தியரின் அனுமதியுடன் சேலைன் பாய்ச்சலாம்.
  • Anti viral medicines அல்லது Oral pills கூட சில நேரம் நோய்க் கிருமிகள் மேலும் அதிகரிப்பதாகவும் கூறப்படுகின்றது. நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எதுவித வைத்தியமும் செய்யக் கூடாது.

2.5.1 சித்த மருத்தவம்:

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது யோக சித்தர்கள் பல்வேறு தொற்று நோய்களை இலகுவில் கிடைக்கும் மூலிகளைக் கொண்டு மிகத் துல்லியமாக குணப்படுத்தியுள்ளார்கள். அந்த வகையில் இப்பன்றிக் காய்ச்சலுக்கு வீட்டுத் தோட்டத்தில் சாதாரணமாகக் காணப்படும் துளசி காய்ச்சலைத் தடுப்பது மட்டுமல்லாது ஏற்பட்ட பின்பும் இலகுவாக குணப்படுத்தும் சக்தி வாய்ந்த மருந்தாகும்.

கடுமையான பன்றிக் காய்ச்சல் நிலையில் ஒரு மேசைக்கரண்டி தேனுடன் ஒரு மேசைக் கரண்டி கறுவாய்த் தூள் கலந்து 5 நாட்களுக்கு குடித்துவர தடிமல், இருமல், சளி போன்ற பிரச்சினைகள் அகலும்.

2.5.2 முகமூடிகள் (Masks):

தடுப்பு முகமூடிகளில் பலவகையுண்டு. இதில் சுநளிசையவழசள என்று அழைக்கப்படும் மிக நுண்ணிய வைரசையும் தடுக்கக் கூடியவையாகும். (N 95 அல்லது Higher Filtering Face Pieces) இவை முகத்தோடு இறுகப் பற்றிக் கொள்பவை. சரியான முறையில் அணிந்தால் வைரஸ் தொற்றுவதைத் தடுக்கலாம்.

2.6 தடுப்பு முறை:

நோய் தாக்கியவரிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும் போது முகமூடி (மாஸ்க்) அணிந்து கொள்வதும் மற்றும் வாழுமிடத்தை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்வதும் நோய் பரவுவதைத் ஓரளவுக்கு தவிர்க்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய்த் தொற்று ஏற்படாது. இந்நிலையில் சளிக்காய்ச்சல் பரவாது தடுப்பதற்கு உங்கள் கைகளைக் கழுவுதல் சிறந்த வழி என கனடா நலத்துறை விபர மடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளை அடிக்கடி சவற்காரம் இட்டு இளஞ் சுடுநீரில் கொண்டு 15 முதல் 20 விநாடிகள் வரைக் கழுவ வேண்டும். அல்லது கைக் குட்டை கொண்டு இருமவும் தும்முதல் பின்னர் கைளைக் கழுவவும் அல்லது கிருமி போக்கி கொண்டு சுத்தப்படுத்தவும்.

  • கைக் குட்டையை விட ரிசுத்தாள் பயன்படுத்துவது சிறந்தது. ரிசுத்தாள் இல்லாத சந்தர்ப்பத்தில் தனது உள்ளங்கையை பயன்படுத்துவதைத் தவிர்த்து கையை மடித்து முழங்கையைப் பயன்படுத்துவது சிறப்பானதாகும்.
  • சளிக்காய்ச்சல் நுண்ணங்கி தொற்றக் கூடிய பாத்திரங்கள், குவளைகள், இசைக்கருவிகள், தண்ணீர் தொட்டிகள் முதலானவற்றை பகிரக் கூடாது.
  • நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவதால் மேசை, கணணி விசைப்பலகை, கணணி மவுஸ், தொலைபேசிக் கருவிகள், கதவுக் கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், நாணயங்கள், வங்கி தன்னியக்க இயத்திரம் போன்றவற்றை கையாண்ட உடன் கை கழுவுவதால் நோய் வருவதை ஒரளவிற்காவது தடுக்கலாம்.
  • நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் ஒருவர் வீட்டில் அவரைத் தனிமைப்படுத்தி வைப்பது அவசியமாகும். நோயாளருக்கு நல்ல ஒய்வு கொடுப்பதும், உடற் பயிற்சி செய்வதும் பானங்கள் நிறையப் பருகுவதும் சத்துணவு உண்ணுவதும் ஒரளவிற்கு நன்மை தரும்.
  • பன்றிக் காய்ச்சல் ஆழமான புரிதலும், அரசும் குடிமக்களும் சேர்ந்து ஒருங்கிணைந்த செயற்பாடுகளுமே இந்தக் தாக்கத்தை மட்டுப்படுத்தலாம்.

  • முடியுமான வரையில் வீட்டில் தனியறையில் நோயாளியை தனிமைப்படுத்தி கண்காணிப்பதுடன் அந்த அறைக் கதவை எச்சந்தர்ப்பத்திலும் அடைத்து வைத்திருத்தல் வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் அந்த அறைக்குள் செல்வதற்கு ஏற்பாடு செய்வது விரும்பத்தக்கது.
  • நோயாளியை எவரும் பார்க்கவிடாமல் தவிர்ப்பது சிறந்தது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் ஒரு மீற்றரை விட தூரத்தில் நின்று பார்க்கலாம்.
  • சுவாசிப்பதற்கு சிரமப்படும் பொது கடுமையான காய்ச்சல் ஏற்பட்டாலும் உடன் வைத்தியரை நாட வேண்டும். சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வெளியில் செல்லும் போது வாய்ப் பாதுகாப்பு அணி அல்லது கைக்குட்டை பயன்படுத்துவது அவசியமாகின்றது.
  • இவ்வாறான சந்தர்ப்பங்களில் சனநெருக்கடியான இடங்களிற்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இரு கைகளையும் அடிக்கடி சவர்காரம் இட்டு கழுவாத சந்தர்ப்பத்தில் வாய், மூக்கு, கண் போன்ற பகுதிகளை கைகளை கழுவாத நிலையில் பிடிக்க வேண்டாம்.
  • இந்நோய் குறித்து விசேடமாக முன்பள்ளி மற்றும் பாடசாலை செல்லும் பிள்ளைகளும், கர்ப்பிணித் தாய்மாரும் மிகவும் விழிப்பாக இருத்தல் வேண்டும்.
  • நோயாளிகள் ஏனையவர்களுடன் கை குலுக்குவதையோ பொது இடங்களில் எச்சில் துப்புவதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

2.7 தற்பாதுகாப்பு நடவடிக்கை:

  • நோயாளிகள் நாட்டினூள் நுழைவதைத் தடுக்க தெர்மல் ஸ்கேனர் என்னும் கருவி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தல்
  • பாடசாலைச் சிறுவர்களிடம் நோய் தொற்றுவதைத் தவிர்க்க பல பாதுகாப்பு நடவடிக்கைப்பட்டமை.
  • மக்களை விழிப்பூட்டும் வகையில் தொடர்பு சாதனங்கள் மூலம் நோயின் பாதிப்பை மக்களுக்கு எடுத்துரைத்தல்.

03. பன்றிக் காய்ச்சலின் இட ரீதியான பரவல்:

3.1 ஆரம்பம்:

  • 1812 ஆம் ஆண்டில் ஒருவகை இன்ஃபுளுவன்சா கிருமி உலகத்தில் பரவியது.
  • 1918 ஆம் ஆண்டில் H1N1 சளிச் சுரத்தின் இன்னுமொரு வடிவம் ( Spanish Flu) ஸ்பெனில் பரவியதால் 5 கோடிக்கு மேலான உயிர்கள் பலியாகினர்.
  • 1968 ஆம் ஆண்டு H3N2 என்ற வடிவம் ( Hong Kong Flu) கொங்கொங்கில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவு கொண்டுள்ளது.
  • 1976 அல் அமெரிக்க படை வீரர்களை இந்நோய் தாக்கியது. பின்னர் இரண்டு ஆண்டுகளிற்கு முன்னரும் பிலிப்பைன்ஸ்சில் இந்நோய் மீண்டும் பரவியது.
  • 2008 மார்ச் மாதத்தில் மெச்சிக்கோயின் தலைநகர் La Gloria  கிராமத்தில் இக்காய்ச்சல்   (  H1N1 ) முதன்முதலில் தோன்றியது. அங்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திவரும் Granjas Carroll
    என்ற பன்றிப் பண்ணையிலிருந்து தான் தொற்றுக் கிருமிகள் முதன் முதலில் வெளிப்பட்டன.

2009 எப்ரலில் இன்புளுவன்சாவின் A வகை வைரஸ்கள் மெக்சிக்கோவில் பரவத் தொடங்கியது. கடந்த நூறு ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் இத்தகைய நோயாக பரிமாணம்  கொள்வது இது நான்காவது முறையாகும். ஆயினும் இத்தடவை பன்றிக் காய்ச்சலின் வீரியம், இதுவரை மிதமானதாக இருந்ததாக  நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

3.2 சர்வதேசம் :

மெக்சிக்கோவில் பன்றிக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரேசில், இஸ்ரேல், அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, கனடா, இங்கிலாந்து, உக்ரென், சவுதி அரேபியா, ஸ்கொட்லாந்து உள்ளிட்ட 208 நாடுகளை இந் நோய் தாக்கியது.


உலகம் முழுவதும் ஏப்ரல் 2009- ஜனவரி 2010 வரை 57 மில்லியன் மக்களுக்கு இந் நோய் தாக்கியது. இதில் 17,000 பேர் பலியாகினர். இதில் 1,800 பேர் குழந்தைகளாவர். அமெரிக்காவில் 263 பேரும், தென்கிழக்காசியாவில் 88 பேரும், தாய்லாந்தில் 65 பேரும், அவுஸ்ரேலியாவில் 31 பேரும், இங்கிலாந்தில் 26 பேரும் இந் நோயால் இறந்தனர். உலகில் ர்1N1 பரவியதைத் பல படங்களின் உதவியுடன் நோக்க முடியும்.

3.3 இலங்கை :

இலங்கையில் இந்நோயினால் பீடிக்கப்பட்ட முதலாவது நோயாளியாக 16 யூன் 2009 இல் இனங்காணப்பட்டது. 8 வயது சிறுவனான இவர் அவுஸ்ரேலியாவிலிருந்த சிங்கப்பூரின் ஊடாக தனது தந்தையுடன் இலங்கைக்கு வந்தார்.

மேலும் இந்நோயினால் பீடிக்கப்பட்டு இறந்த முதலாவது நோயாளியாக கண்டியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் இனங் காணப்பட்டதுடன் இம் மாணவன் 4ஆந் நவம்பர் 2009 உயிரிழந்தான்.

மொத்தமாக 78 பேர் இந்நோயினால் பீடிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டமை. இவர்களுள் 68 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என்றும் 10 பேர் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகியவர்கள் என்றும் பிரித்தானியா மற்றும் சவுதி அரேபிய நாடுகளிலிருந்து தலா 7 பேரும் இந்தியாவிலிருந்து 5 பேரும் அமெரிக்காவில் 3 பேரும் நோய்த் தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

நாட்டினைப் பரவலாக நோக்குமிடத்து கண்டி பேராதனை, நுவரெலியா, காத்தான்குடி, குருநாகல், பதுளை, இப்பாகமுவ, மாத்தளை, கம்பளை, போன்ற வைத்தியசாலைகளில் நோய் அறிகுறிகளுடன் அதிகம் பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கண்டி, குருநாகல், அம்பாறை, மாத்தளை, கம்பளை, போன்ற பிரதேசங்களில் மரணங்கள் பதிவாகியிருந்தன. (29.12.2009 வீரகேசரி)

  • தடுப்பு

நாடு முழுவதிலும் காய்ச்சலை ஆய்வு செய்ய 33 வைத்தியசாலைகளில் விசேட பிரிவுகள் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கவை. H1N1 வைரசைக் கட்டுப்படுத்த வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

04.    முடிவுரை :

உலக நாடுகள் பலவற்றை ஆட்டிப்படைத்த பன்றிக் காய்ச்சல் இன்று பெரும்பாம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

து.ரஜனி           Rajani Thurai